Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பரமக்குடி: ராமநாதரம் மாவட்டம், பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரண்யா. ரூபேஷ் (13) என்ற மகனும், ஹர்சிதா(11) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் அவரது தந்தையுடன் பரமக்குடி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து சரண்யாவின் 90 சவரன் நகைகளை விற்று தொழில் நடத்தினார். மேலும், நலிவுற்ற நிலையில் கடன் வாங்கினார்.
கடன் கொடுத்தவர்கள் ரமேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் சரண்யாவுக்கும், ரமேஷுக்கும் தகராறு ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டதால் மகன் ரூபேஷை கடன்காரர்களிடம் காலையில் ஒப்படைத்து விட்டு, அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை கடன்காரரிடம் செலுத்திய பிறகு மகனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரமேஷ் வீட்டிலிருந்து சரண்யாவை நேற்று வெளியே விரட்டினர். இதையடுத்து சரண்யா தனது மகன் மற்றும் சகோதரருடன் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சரண்யா கூறும்போது, கடன் கொடுத்தவர்களிடம் எனது மகனை அடமானம் வைக்கிறார். எனது கணவர் வீட்டார் என்னையும், குழந்தைகளையும் விரட்டி விட்டனர். எனது கணவர் மற்றும் கடன் கொடுத்தவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.